இந்திய தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சர்வதேச மகளிர் தினமான இன்று ஆயிரக்கணக்கான பெண்கள் அணிதிரண்டனர்.
இந்திய மத்திய அரசின் விவசாய திருத்தச் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்திய தலைநகர் டெல்லியில் 3 இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பூத்திருக்கும் கடுகு வயல்களின் நிறத்தைக் குறிக்கும் வகையிலான பிரகாசமான மஞ்சள் நிற தாவணிகளை அணிந்த ஆயிரக்கணக்காக பெண்கள் இன்று கூடி இந்திய அரசின் புதிய விவசாய சட்டத்தை எதிர்த்து முழக்கமிட்டனர். ஆங்காங்கு சிறிய பேரணிகளையும் அவர்கள் நடத்தினர்.
இது பெண்களின் வலிமையைக் குறிக்கும் ஒரு முக்கியமான நாள். பெண்கள் ஒன்றுபட்டால் எங்கள் இலக்கை மிக விரைவாக அடைய முடியும் என்று நம்புகிறேன் என இப்போராட்டத்தில் பங்கேற்ற வீனா என்ற பெண் தெரிவித்தார்.
ஹரியானா - டெல்லியின் எல்லைக்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் 20,000 -க்கும் மேற்பட்ட பெண்கள் கூடியிருந்ததாக போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, விவசாயிகளின் தீவிர போராட்டங்களை அடுத்து புதிய விவசாய சட்டங்களை 18 மாதங்கள் ஒத்திவைக்க பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு முன்வந்துள்ளது. எனினும் அதனை விவசாயிகள் ஏற்கவில்லை. இந்தச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியாவின் 2.9 டிரில்லியன் பொருளாதாரத்தில் விவசாயம் கிட்டத்தட்ட 15 வீதத்துக்கு மேல் ஈடுசெய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.